ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம் 30.06.2025 அன்று நடைபெற்றது. நிர்வாக தரப்பு, தாங்கள் 2022 நவம்பர் மாதத்தில் முன்மொழிந்த, குறுகிய ஊதிய விகிதங்கள் மட்டுமே அமலாக்கப்பட இயலும் என, ஒரு கறாரான நிலையை எடுத்தது. பிப்ரவரி 2025இல், ஊழியர் தரப்பு முன்மொழிந்த ஊதிய விகிதங்களை, ஏற்றுக்கொள்ள இயலாது என்று அவர்கள் கூறினர். ஊதிய விகிதங்கள் தொடர்பாக, கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. ஊதிய மாற்ற உடன்பாடு இறுதி செய்யப்படுவது, அதீத காலதாமதம் ஆகிறது என்பதை கூறிய ஊழியர் தரப்பு உறுப்பினர்கள், ஊதிய மாற்ற பிரச்சனையில், விரைவில் ஒரு தீர்வு காண ஒத்துழைக்க வேண்டும் என, நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர். ஊதிய விகிதங்களில், அனாமலிகள் உருவாகும் ஊதிய விகிதங்களையாவது, குறைந்தபட்சம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என ஊழியர் தரப்பு தெரிவித்தது. ஊதிய நிர்ணயப் பலன், குறைந்தபட்சம் 5% ஆவது இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஊழியர் தரப்பின் கோரிக்கைகளை, உயர் அதிகாரிகளிடம் விவாதிப்பதாக, நிர்வாக தரப்பு உறுப்பினர்கள் உறுதி அளித்தனர். மேலும், காலதாமதம் இன்றி ஊதிய மாற்ற ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாக தரப்பு, ஆகிய இருவரும் ஏற்றுக் கொண்டனர். எனவே, அடுத்த கூட்டம் 14.07.2025 அன்று நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன், தோழர் P.அபிமன்யு GS BSNLEU மற்றும் தோழர் சந்தேஸ்வர் சிங் GS NFTE BSNL ஆகிய இருவரும், DIRECTOR (HR)ஐ சந்தித்து, ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவில் நடைபெற்ற விவாதங்களை எடுத்துக் கூறி, ஊதிய மாற்ற பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஊதிய மாற்ற உடன்பாடு, மேலும் காலதாமதம் ஆகாமல் கையெழுத்திடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட DIRECTOR (HR), இந்தப் பிரச்சினையில் உதவுவதாகவும் உறுதியளித்தார்.