8 மாத சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்
அருமை தோழர்களே வணக்கம்!
அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையான ஒப்பந்த தொழிலாளிக்கு கடந்த 8 மாதமாக நாடு முழுவதும் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், முற்றுகை, காத்திருப்பு, LEO அவர்களுக்கு மகஜர், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு என நாம் நடத்தாத போராட்டம் இல்லை என்று சொல்லலாம். ஆனாலும், பசித்த வயிற்றுக்கும், பாலுக்கு அழும் குழந்தைக்கும் பதில் என்பது மட்டும் இல்லை என்ற அவலம் நீடிக்கிறது.
உலகம் முழுவதும் போராடும் தொழிலாளியின், உச்ச பட்ச ஆயுதமான வேலை நிறுத்த ஆயுதத்தை நாம் தற்போது எடுக்க நமக்கு அறைகூவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
TNTCWU தமிழ் மாநில சங்கம், வருகிற 2019 செப்டம்பர் 26,27,28 ஆகிய தேதிகளில் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போர் பிரகடனம் வெளியிட்டுள்ளார்கள்.
கோரிக்கைகள்
மத்திய அரசே! BSNL நிர்வாகமே!!
ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கு! 8மாத சம்பளத்தையும் நிலுவையுடன் வழங்கு!!
ஒப்பந்த தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்யாதே!
ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்காதே !
தோழர்களே அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடுவோம். சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களும் எந்த பணியும் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்ய கூடாது. வேலை நிறுத்தத்தை முழுமையாக நடத்தி, அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம். கோரிக்கைகளை வென்றெடுப்போம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
K . ராஜன்,
மாவட்ட தலைவர்
M . செல்வம்,
மாவட்ட செயலர்
C . பாஸ்கர்,
மாவட்ட பொருளர்
TNTCWU சேலம் மாவட்டம்
குறிப்பு: ஒப்பந்த ஊழியர்களின் மகத்தான 3 நாள் வேலைநிறுத்தத்தின் முதல் நாள், 26.09.2019 அன்று சேலம் PGM அலுவலகம் முன்பு காலை 10.30 மணி அளவில், BSNLEU -TNTCWU சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதிலுமிருந்து இரண்டு சங்க தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் BSNLEU