Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, September 19, 2018

நினைவுகூா்வோம்! தியாகிகளை!! போற்றிடுவோம் அவா்தம் தியாகங்களை!!


19.09.1968 மத்திய அரசு ஊழியர் இயக்கத்தின் மகத்தான பொன்னாள். 


ஆம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை, பொருளாதார கோரிக்கைகளுக்காக நடைபெற்ற நாடுதழுவிய  மிக உக்கிரமாக நடைபெற்ற வேலைநிறுத்தம். மகத்தான   வேலைநிறுத்தம் நடைபெற்ற இந்த நாளின் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி, இந்த ஆண்டு (1968 − 2018) வேலைநிறுத்த பொன்விழா ஆண்டு நினைவாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களால் கொண்டாடப் படுகிறது.

குறைந்தபட்ச ஊதியம் கேட்டு அதிகபட்சமாக உயிர் நீத்த ஊழியர்களின் தியாகத்தை போற்றுவோம்.

பிகாங்கீர், பதான்கோட் , இந்திரப்பிரஸ்தம், டெல்லி உள்ளிட்ட நான்கு  இடங்களில் போலீஸ் காரர்களின் துப்பாக்கி சூட்டில் ஒன்பது ரயில்வே ஊழியர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள். வேலைநிறுத்த முந்திய நாளிலே, புது டெல்லியில் மட்டும் 1650 தபால் தந்தி ஊழியர்களும் 350 இதர மத்திய அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .

ரயில்வே ,பாதுகாப்பு துறைகளை விட தபால் தந்தி பிரிவில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. 8700 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 44,000 தற்காலிக ஊழியர்களுக்கு TERMINATION நோட்டீஸ் வழங்கப்பட்டது . 10,000  பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.  சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் மூன்றாவது முறையாக ESMO (ESSENTIAL SERVICE ORDINANCE ) அமுல்படுத்தப்பட்டது .

1960 வேலை நிறுத்தத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட JCM அமைப்பை நமது தலைவர்கள் மிகச் சரியாக பயன்படுத்தினார்கள் .1967 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற JCM கூட்டத்தில்

1.தேவைகேற்ற குறைந்தபட்ச ஊதியம்


2.பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைப்பது .


3.பஞ்சப்படி கணக்கீட்டு முறையை மாற்றுவது என மூன்று  கோரிக்கைகளை ஊழியர் தரப்பு வைத்தது .ஆனால் அரசு பிடிவாதமாக பஞ்சப்படி பார்முலா மாற்றுவதை அஜெண்டாவில் சேர்க்காமல் நிராகரித்தது .


நாடுமுழுவதும் வேலைநிறுத்தத்தின் அவசியமும் ஊழியர்களிடையே கோபமும் அதிகரித்திருந்தது .அரசும் தன் பங்கிற்குஅன்றைய உள்துறை அமைச்சர் Y.B.சவான் மூலம் 25.08.1968 அன்று அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது . ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை என ஒருபுறமும் மறுபுறம் வேலைநிறுத்தத்தை முடக்க தலைவர்களை கைது செய்துவதும் என்ற தனது இயல்பான முகத்தை அன்றைய அரசு வெளிக்காட்டியது .

ஆனாலும் திட்டமிட்டபடி, 19.09.1968 அன்று காலை 06.00 மணிக்கு நாடுமுழுவதும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது .நாடுமுழுவதும் 2.80 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாக அதிகாரபூர்வமாக செய்திகள் அறிவிக்கப்பட்டது .

வேலைநிறுத்தம் ஒருநாள் என்றாலும் அதன் பாதிப்புகள் பல நாட்களுக்கு  நீடித்தது .பழிவாங்கல்கள், கைது இவைகளை கண்டித்து கிட்டத்தட்ட ஒருமாத காலம் வரை விதிப்படி வேலை (WORK TO RULE ) கடைபிடிக்கப்பட்டது . பாரதப் பிரதமரின் நேரடி தலையீட்டினால் விதிப்படி வேலை (WORK TO RULE ) முடிவுக்கு வந்தது .

வேலை நிறுத்த நாட்களில் அரசு நடந்துகொண்ட மிகமோசமான அடக்குமுறைகளை குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது, அன்றைய பிரதமர் திருமதி .இந்திரா காந்தி அம்மையார் அவர்களே ஊழியர்களின் வேலைநிறுத்தம்  எப்படி இந்த அளவிற்கு சர்வதேசக் கவனத்தை ஈர்த்தது என ஆச்சரியப்பட்டார்கள்.

பெருமழைக்கு பின் வடிந்தோடும் மழைநீரைப் போல  ஓராண்டுக்கு பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திரு V.V.கிரி அவர்களிடம் வேலைநிறுத்தப்பழி வாங்குதலை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று பழிவாங்குதலால் படிப்படியாக நீக்கப்பட்டன .

19.09.1968  என்பது உயிர்பலி, டிஸ்மிஸ், சஸ்பென்ஷன் என நம் முன்னோர்கள் அடக்குமுறைக்கு எதிராக விரும்பி ஏற்றுக்கொண்ட பதக்கங்கள். 

நினைவுகூர்வோம் தியாகிகளை! 
போற்றிடுவோம் அவர்தம் தியாகங்களை!!