Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, January 1, 2017

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநாடு சென்னையில் எழுச்சியுடன் துவங்கியது

Image result for theekkathir


பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் 8 ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் (ஏ.எம்.பட்டீல் நினைவரங்கில்) சனிக்கிழமையன்று (டிச. 31) எழுச்சியுடன் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்திணை கலைக்குழுவின் தப்பாட்டத்துடன் கோலாகலமாக மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்கின. தேசியக் கொடியை சங்கத்தின் அகில இந்திய தலைவர் பல்பீர்சிங் ஏற்றினார். மாநாட்டுக் கொடியை பொதுச் செயலாளர் பி.அபிமன்யு ஏற்றினார்.

பல்பீர்சிங் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் வரவேற்புக்குழுத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரையாற்றினார்.
நேபாள தொலைத்தொடர்பு ஊழியர் சங்க தலைவர் ராஜ்பகதூர் ராவல், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஜி.ஜெயராஜ், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அனிமேஷ்மித்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக “புன்னகையுடன் பணியாற்றுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரிவாத்சவா, பி.அபிமன்யு, எஸ்.என்.இ.ஏ. தலைவர் ஜி.எல்.ஜோகி, தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் சந்தேஸ்வர் சிங், சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் ஸ்வபன் சக்ரவர்த்தி, தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் (எப்.என்.டி.ஒ) பொதுச் செயலாளர் கே.ஜெயபிரகாஷ், பி.எஸ்.என்.எல். சென்னை சர்க்கிள் சுரேஷ்குமார், டி.இ.பி.யு.
தலைவர் செல்லபாண்டி ஆகியோர் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவைகள் குறித்தும், மேம்பாடுகள் பற்றியும் கருத்துரை வழங்கினர்.மாநாட்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு சர்க்கிள் பொது மேலாளர் பூங்குழலி, சென்னை சர்க்கிள் பொதுமேலாளர் கலாவதி, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா, வரவேற்புக்குழு பொதுச் செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலாளர் வி.ஏ.என்.நம்பூதிரி, ஏ.எம்.குப்தா, 2,300 பிரதிநிதிகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஜனவரி 3 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக தொடக்க விழாவுக்கு பின்பு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியில் வரலாறு, அறிவியல், இலக்கியம் சார்ந்த தமிழ், ஆங்கில புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. ஏராளமானோர் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கினர். மாநாட்டின் இடையிடையே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அவரவர் மொழியில் பாட்டுப் பாடி அசத்தினர். 8வது மாநாட்டை குறிக்கும் வகையில் 8 பெண் தோழர்கள் ஒரே மாதிரியான சீருடை அணிந்து கொடியுடன் அனைவரையும் வரவேற்றனர்.