நேற்று (24.06.2026) மதுரையில், BSNLEU சங்கத்தின், வெள்ளி விழா கொண்டாட்டம், பிரமாண்டமான முறையில், வெகு சிறப்பாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து, 30 தோழர்கள், இரண்டு தனி வாகன ஏற்பாடடோடு, நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது. வெற்றி விழாவில் கலந்து கொண்ட BSNLEU - AIBDPA - TNTCWU தோழர்களுக்கு, நெஞ்சு நிறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், வர்க்க உணர்வோடு, ஊதியம் இழந்து, விழாவில் கலந்து கொண்ட, TNTCWU தோழர்களுக்கும், வயது முதிர்வு பிரச்சனைகள் இருந்தாலும், தூக்கம் தொலைத்து, கண் விழித்து, நெடு தூரம் பயணம் செய்து, நிகழ்வில் கலந்து கொண்ட AIBDPA தோழர்களுக்கும், விழா நிகழ்ச்சிக்கு நன்கொடையும் வழங்கி, சொந்த விடுப்பு எடுத்து, உணர்வு பூர்வமாக விழாவில் கலந்து கொண்ட BSNLEU தோழர்களுக்கும், நமது பாராட்டுக்கள்.
மாநில சங்கம் நிர்ணயித்த நன்கொடையை முழுமையாக வழங்க, நிதி உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நமது நன்றிகள். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள், தோழர்கள் S. தமிழ்மணி, E. கோபால், S. அழகிரிசாமி ஆகியோரை கௌரப்படுத்திய, BSNLEU தமிழ் மாநில சங்கத்திற்கு, சேலம் மாவட்ட CoC சார்பாக, நன்றிகளையும், தோழமை வாழ்த்துக்களையும், தெரிவித்து கொள்கிறோம்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற, கடந்த எட்டு தேர்தல்களிலும், தொடர்ந்து வெற்றி வாகை சூடி, சந்தா பிடித்தம் அடிப்படையிலும், கடந்த 22 ஆண்டுகளாக, நாடு முழுவதும், அதிக உறுப்பினர்களை வைத்துள்ள, மாபெரும் பேரியக்கமான, BSNLEU சங்கத்தின், கால் நூற்றாண்டு கால சாதனைகளையும், கடந்த வந்த போராட்ட பாதைகளையும், ஜனநாயக செயல்பாடுகளையும், தோழர்களின் தியாகங்களையும், நினைவு கூறும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது, என்று சொன்னால் அது மிகையல்ல. மாநிலம் முழுவதும், ஒரே சித்தாந்தத்தின் கீழ், தங்களை இணைத்து கொண்டு, இணைந்து பயணம் மேற்கொண்ட தோழமை சொந்தங்களை, ஒருவருக்கு ஒருவர் மீண்டும் சந்தித்து கொண்டதில், நமது தோழர்கள் மத்தியில் ஏற்பட்ட மகிழ்ச்சியை, அளவிட முடியாது.
400க்கும் மேற்பட்ட (சுமார் 80 பெண் தோழர்கள்) கலந்து கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சியை, பெரும்பான்மை நிதி சுமையை ஏற்று, சிறப்பான ஏற்பாடுகள் செய்து, நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்களுக்கு, குளிரூட்டப்பட்ட கூட்ட அரங்கம், சிறப்பான உணவு, காலை மாலை இரண்டு வேளையும் தேநீர், பலகாரம் என அசத்திய, மதுரை மாவட்ட CoC தோழர்களையும், சேலம் மாவட்ட CoC சார்பாக, மனதார பாராட்டுகிறோம்.
