Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, June 26, 2014

அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்?




அரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடியவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன் காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக மாறியிருக்கிறது.
வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.பள்ளிக் கல்வி மேலாண்மைத் தகவல் மைய ஆய்வறிக்கையின்படி தமிழகத்தில் 500 பள்ளிகளில் வெறும் ஐந்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1,000 பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை. ராமகோவிந்தன்காடு பள்ளிக்கூடம் ஆயிரத்து ஒன்றாக இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மூடப்பட்ட வெற்றுக்கட்டிடம் சிதிலம் அடையும். ஒரு பெருமழை நாளில் உத்திரமும் சுவர்களும் உடைந்து குட்டிச்சுவராகும்.
புதர்களும் புற்றுகளும் வளரும். பாம்புகள் நுழையும், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கொடுத்த அந்தக்கோயில், நம்முடைய சுயநல வேட்கையையும் சமூக அலட்சியத்தையும் பிரகடனப்படுத்திக்கொண்டு புதர் மண்டிய ஒரு சமாதிபோல் நிற்கும். இந்தியாவின் 100 பள்ளிகளில் 40 பள்ளிகள் இன்றைக்குத் தனியார் பள்ளிகள், அடுத்த சில 10 ஆண்டுகளில் மீதியுள்ள 60 பள்ளிகளும் இப்படிச் சமாதிகள் ஆகலாம்.
தலைமுறைகளின் தவம்ஒரு அரசுப் பள்ளிக்கூடம் என்பது வெறும் செங்கற்களால் மட்டுமா எழுப்பப்படுகிறது? ஒவ்வொரு பள்ளியின் பின்னணியிலும் எத்தனையெத்தனை மனுக்கள், எத்தனையெத்தனை போராட்டங்கள்? சாலையில் நடக்கும் சக மனிதனின் கால் தடம், தன் காலில் பட்டால் தீட்டு என்று சொல்லி, அவன் தன் இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக்கொண்டு தன் காலடிச் சுவடுகளைப் பின்புறமாகக் கூட்டியபடியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த சமூகம் இது. சாலையில் எங்கேனும் எச்சிலைத் துப்பிவிட்டால், தீட்டாகிவிடும் என்று கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்று சக மனிதனுக்கு ஆணையிட்டிருந்த சமூகம், இப்படிப்பட்ட சமூகச் சூழலில், எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து, எல்லோர் வீட்டுப்பிள்ளைகளும் சரிசமமாக உட்கார்வதும் படிப்பதும் சாப்பிடுவதும் உரையாடுவதும் உறவாடுவதும் எத்தனை தலைமுறைகளின் நூற்றாண்டுத் தவம்? இந்தியாவில் எந்த அமைப்பாலும் உருவாக்க முடியாத சமூக நீதி அமைப்பு அரசுப் பள்ளியில் சாத்தியமானது. அந்த அமைப்புகளைத்தான் இன்றைக்கு ஒவ்வொன்றாகக் கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறோம்.அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன. (தனியார் பள்ளிகளைப் போலவே) சீரழிவுக்கு அடிப்படைக் காரணம் என்ன? நம்முடைய பொறுப்பற்றத்தனம்.
நம் அருகில் இருக்கும் அரசுப் பள்ளி நம் சொத்து; அங்கே பல்லாயிரங்களில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் நம் வரிப்பணம்; அங்கே நம் குழநதைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை; அதற்காகக் கை உயர்த்திக் கேள்விகேட்பது நம்முடைய உரிமை என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருப்பின் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
நன்றி : தி இந்து (ஜூன் 23) கட்டுரையின் பகுதிகள்.