Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 23, 2021

மிக மகிழ்ச்சியான செய்தி

சம்பளம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்  சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு


கடந்த ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி மரியாதைக்குரிய நீதி அரசர் திரு சுரேஷ்குமார் அவர்கள் ஒப்பந்த தொழிலாளர் சம்பந்தமாக முக்கியமான உத்தரவை பிறபித்திருந்தார். அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை சரியாக BSNL நிர்வாகம் கணக்கிட்டு,  அந்த பட்டியலை மத்திய லேபர் அதிகாரிகளிடம்  அளிக்க வேண்டும் என்றும் , மத்திய லேபர் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கி எண், ஆதார் எண் மற்றும் அடையாளத்தை உறுதி செய்து விட்டு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்தார். சம்பளம் வழங்கிய பின்னர் இது சம்பந்தமாக மத்திய  லேபர் அதிகாரிகள் ஓர் அறிக்கையை 07.01.2021- க்குள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். 

இந்த நிலையில் பட்டியலை பெற்றுக் கொண்ட மத்திய லேபர் அதிகாரிகள் கள ஆய்வுப் பணியை தொடங்கினார்கள். ஏறக்குறைய ஜனவரி மாதம் முழுமைக்கும் அந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் நீதி மன்றம் குறிப்பிட்டபடி சம்பளம் வழங்குவதற்குப் பதில் கள ஆய்வு விவ்ரத்தை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க போவதாக தெரிவித்தனர்.  இதனிடையில் சுழற்சி அடிப்படையில் பழைய நீதிபதி மாற்றல் செய்யப்ட்டு புதிதாக நீதிபதி திரு கோவிந்தராஜ் அவர்கள் வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

 நீதி அரசர் திரு சுரேஷ்குமார் அவர்கள் பல உத்தரவுகளை வெளியிட்டிருந்த காரனத்தால் அவர் மூலமாகவே விசாரணை நடைபெற வேண்டும் என்று நமது வழக்கறிஞர் திரு N.G. R பிரசாத் அவர்கள் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டார். சுமார் 2 மாதங்கள் நமது வழக்கறிஞரின்  இடைவிடாத முயற்சியின் காரனமாக முந்தைய நீதி அரசரிடமே விசாரனை நடத்தலாம் என்று தலைமை நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன் அடிப்படையில் 22.03.2021 அன்று முந்தைய நீதிபதி திரு சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின்னர் நீதிஅரசர் அவர்கள் 12 பக்க உத்தரவை வெளியிட்டுள்ளார்.  அந்த 22.03.2021 உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள  மிக முக்கியமான ஷரத்துக்களை மட்டும் கீழே தருகின்றோம்.

1. இன்றைய விசாரணையில்  தொழிற்சங்க வழக்கறிஞர், ஒப்பந்தகாரர் வழக்கறிஞர், மத்திய லேபர் அதிகாரிகளின் வழக்கறிஞர் ஆகியோர் நீதிபதி முன்னர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

2. 10.12.2020 வெளியிடப்பட்ட உத்தரவுக்குப் பின்னரும் மத்திய லேபர் அதிகாரிகள்  சம்பளம் வழங்கவில்லை. மேலும் நீதிமன்றத்திற்கு அறிக்கையையும் சமர்ப்பிக்க வில்லை.

3. மத்திய லேபர் அதிகாரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்திய லேபர் அதிகாரிக்கு கூடுதல் பணிச்சுமை இருந்ததாலும், நெய்வேலி லிக்னைட் கழகத்தில் தொழிற்சங்க தேர்தல் நடத்த வேண்டிய பொறுப்பு இருந்ததாலும் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார். உடனடியாக 10.12.2020 நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் மெற்கொண்டு, பணியை முடித்து விட்டு ஓர் அறிக்கையை நீதி மன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பித்து விடுவதாகவும் உறுதி அளித்தார்.

4. BSNL சார்பாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அவர்கள் ஏற்கனவே 30 கோடி ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தி விட்டோம் என்றும்  மேலும் 5.4 கோடி ரூபாயையும் தற்போது செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

5. தற்போது மத்திய லேபர் அதிகாரிகள் கணக்கில் உள்ள சுமார் 29 கோடி ரூபாயைக் கொண்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கி விடலாம் என்றும் BSNL  வழக்கறிஞர்  தெரிவித்தார். மேலும் BSNL  ஒப்பந்தகாரர்கள் பில்கள் அனுப்பிவிட்டால் அதையும் அனுமதித்து மத்திய லேபர அதிகாரியிடம் அல்லது ஒப்பந்தகார்களிடம் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப ,  தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தார்.

6. ஒப்பந்தகார்ர்களின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் 10.12.2020 தீர்ப்பை மாற்ற வேண்டும் என்றும் பில்கள் அனுமதிக்காததால் ஒப்பந்தகார்ர்கள் படும் கஷ்டங்களை எடுத்துரைத்தார்.

7. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கு மத்திய லேபர் அதிகாரிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும்  செய்ய தயாராக இருப்பதாக தொழிற்சங்க  வழக்கறிஞர் தெரிவித்தார். ஒப்பந்த தொழிலாளர்களூக்கு வழங்கப்படவேண்டிய தொகையை சரி செய்து வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

8. காலதாமத்திற்கு மத்திய லேபர் அதிகாரிகள் குறிப்பிட்ட காரணங்களை ஏற்று கொள்வதாகவும் தங்களுடைய உறுதி மொழிக்கேற்ப 10.12.2020 உத்த்ரவை மத்திய லேபர் அதிகாரிகள் அமுல் படுத்த வேண்டும் என்று நீதி அரசர் உத்தரவிட்டார்.

9. ஏற்கனவே ஒரு பகுதி சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாகவும் தற்போதுள்ள 29 கோடி ரூபாய் சம்பள நிலுவை வழங்க போதுமானதாக இருக்கும் என்று நீதி மன்றம் கருதுகின்றது.

10. ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் முழுமையாக வழங்கப்படுவதற்கு முன்னர் ஒப்பந்தகாரர்களுக்கோ  EPF, ESI  போன்றவற்றிற்கோ தற்போது தொகை வழங்க முடியாது.

11. அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட இடைக்கால உத்ரவை வெளியிடப்படுகின்றது.

அ) 10.12.2020 உத்தரவை  உடனடியாக மத்திய லேபர் அதிகாரிகள்  அமுல்படுத்த வேண்டும்.

ஆ) இதற்கு ஒப்பந்தகாரர்களும், BSNL  நிர்வாகமும் தொழிற்சங்கமும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இ) அதன்பின்னர் மத்திய லேபர் அதிகாரிகள் ஓர் அறிக்கையை அடுத்த விசாரனைக்கு முன்னர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஈ) அந்த அறிக்கையை பரிசீலனை செய்த பின்பு, ஒப்பந்தகாரர்களுக்கான தொகை, சட்டபூர்வ EPF, ESI  க்கான தொகை வழங்குவதற்கான உத்தரவை நீதி மன்றம் வெளியிடும்.

உ) ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்கும் எவ்வளவு சம்பள பாக்கி தொகை என்பதை அவர்கள் கோரியதின் அடிப்படையில்,   BSNL  நிர்வாகத்திடமும் ஒப்பந்தகாரர்களிடமும் உள்ள பட்டியலை சரிபார்ப்பு செய்த பின்னர்  அவர்களுக்கான உரிய தொகை வழங்கப்படவேண்டும்.

ஊ) ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பள பாக்கி வழங்குவதற்கு மத்திய லேபர் அதிகாரிகளூக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தக்காரணத்தைக் கொண்டும் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படாது. இதுவே இறுதியானது. அதற்குள் வழங்கப்பட வேண்டிய அனைத்து தொகையையும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் எந்த ஒரு தொழிலாளியின் கோரிக்கையையும் நீதி மன்றம் பரிசீலனை செய்யாது.

தோழர்களே !. மறுபடியும் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பெற்றுள்ளோம். இரண்டு வாரங்களுக்குள் ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவைம் வழங்கப்படும். அதன் பின்னர் EPF, ESI  தொகையும் செலுத்தப்படும். ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்குரிய சம்பளத் தொகை சரிபார்க்கபடும் என்று மிக முக்கியமான அம்சங்கள் இந்த உத்தரவில்  அடங்கியுள்ளன.

நீதிமன்ற விசாரணையில் நடுவிலே சிறிது பின்னடைவு ஏற்பட்டது போல் தெரிந்த நிலையில் நமது வழக்கறிஞர் N.J.R பிரசாத் அவர்கள்  உடனடியாக உரிய முறையில் தலையிட்டு முந்தைய நீதிபதியைக் கொண்டு நமது வழக்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இது சாதாரண நிகழ்வு அல்ல.. மாபெரும் சாதனை. அது மட்டுமல்ல 22.03.2021 அன்று நடைபெற்ற விசாரனையில்  தொழிலாளர்களுக்கு சாதகமான உத்தரவையும்  பெற்றுள்ளார். இரண்டு வாரங்களுக்குள் சம்பளம் , EPF, ESI எல்லாம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது வழக்கறிஞரை நாம் மனமார பாரட்டுகின்றோம்.. வாழ்த்துகின்றோம்..நீதி மன்ற போராட்டங்களிலும் நாம் தோற்ற தில்லை என்பதை உறுதி செய்துள்ளோம்.

தோழமையுடன்
E. கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU

தகவல்: BSNLEU - TNTCWU  மாநில சங்கங்கள் 

நீதிமன்ற உத்தரவு காண இங்கே சொடுக்கவும் 

குறிப்பு: அடுத்த விசாரணை 07.04.2021 அன்று நடைபெறும்..