Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, June 24, 2017

நாசகரப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டுசெல்கிறது மோடி அரசு - அதிகாரிகள் கரம் கோர்க்கிறார்கள்




250 சங்கங்கள் ஒன்றுபட்டு போராட முடிவு


மோடி அரசின் சீரழிவான மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு 250-க்கும் மேற்பட்ட சங்கங் களை இணைக்கும் விரிவடைந்த அனைத் திந்திய பொதுத்துறை மற்றும் மத்திய அரசுஅதிகாரிகளின் கூட்டமைப்பு உருவாகி யுள்ளது. பொதுத்துறை வங்கிகள் பொதுத்துறை மற்றும் மத்திய அரசு நிறுவன அதிகாரிகள் அமைப்புகளின் கூட்டம் கடந்த ஜூன்20 அன்று பெங்களூரில் நடைபெற்றது.

பொது த்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை-அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கும் மோடி அரசின் சீரழிவான மக்கள் விரோத நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக கூடிய இக்கூட்டம் எதிர்கால நடவடிக்கை களை திட்டமிடுவதற்காக நடவடிக்கை குழுஒன்றினை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவன அதிகாரிகளின் தேசிய கூட்டமைப்புத் தலைவர் வி.கே. தோமர் இக்குழுவின் செயல்தலைவராகவும், அனைத்திந்திய வங்கிஅதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.தாமஸ் பிராங்கோ ஒருங்கிணை ப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கூட்டு நடவடிக்கைக் கூட்டமைப்பின் பிரதிநிதி உறுப்பினர்களாக இந்திய நிலக்கரி, எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை, எரிசக்தித்துறை, பொதுத்துறைவங்கிகள், தொலைத்தொடர்புத்துறை, காப் பீட்டுத்துறை, தேசிய நீர்மின்சக்திக்கழகம், தேசிய அனல்மின் சக்திக்கழகம், ரயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் அரசுப் பதிவிதழ் அதிகாரிகளின் அமைப்புகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டஅமைப்புகளின் அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் இதன் உறுப்பினர்களாக இருப் பார்கள்.

போராட்டக் களம் விரிகிறது

இந்திய மக்களின் மிகப்பெரும் நிதி மற்றும் சொத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தில் முயற்சித்ததுபோல் தனியார்மயமாக்கலின் முதற்கட்டமான பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை இணைக்கும் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து கூட்டமைப்பு போராடும்.

நாட்டின் பாதுகாப்புத்துறையில் சிறந்த சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவன மான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை உடனேநிறுத்த வேண்டும், நாட்டின் பாதுகாப்புத் துறையை ரிலையன்ஸ் மற்றும் அந்நிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவ னங்களின் முதலீடுகளை திரும்பப்பெறுவது என்ற பெயரில் நல்ல பொதுத்துறை நிறுவனங்களை மிக மலிவான விலைக்கு மத்தியஅரசு விற்று வருகிறது. இந்திய சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு முதலாளிகள் தயாராக இல்லாத போதுதான் இந்திய சுற்றுலாவளர்ச்சிக்கழகம் மத்திய அரசால் துவக்கப் பட்டது. இக்கழகத்திற்கு சொந்தமான 35 சொகுசு விடுதிகளில் 20-ஐ மிகக்குறைந்த விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல் வாதிகளின் நெருங்கிய உறவினர்களுக்கும் தனிநபர்களுக்கும் மத்திய அரசு இப்போது விற்றுவிட்டது.

இக்கழகத்தின் மகாபலிபுரம் டெம்ப்பிள் பே சுற்றுலா விடுதியை சந்தைவிலையில் 100-இல் 1 பங்கு விலைக்கு ஜிஆர்டிநிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுவிட்டது. இதன் சமீபத்திய உதாரணமாகும். மிகப்பெரும் மதிப்பு கொண்ட எஞ்சிய விடுதிகளை மத்திய அரசு விற்கக்கூடாது என கூட்டமைப்பு அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தொலைத் தொடர்புத்துறையில் முன்னோடியாக இருக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் எல்லா குக்கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையை நேர்மையுடன் நிறைவேற்றி வருகிறது. இப்பொதுத்துறை நிறுவனங்களை ஆதரிப்பதற்கு பதிலாக ரிலையன்ஸ் உள்ளிட்ட மற்ற தனியார் நிறுவனங்களை மத்திய அரசு ஆதரித்து வருகிறது.

இப்பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி நடை பெறும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 27.7.2017 ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இக்கூட்டமைப்பு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டுள்ளது. 

ஸ்டேட் வங்கியின் ஆறு (ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட்பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸடேட் பேங்க் ஆப் திருவாங்கூர் போன்ற) இணை வங்கிகளை இணைத்த நடவடிக்கையால் ஏற்பட்ட நட்டத்தை கருத்திற்கொண்டு எதிர்கால இதர வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.ரயில்வே துறை தனியார் மயமாக்கப் படமாட்டாது என்ற பிரதம மந்திரியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.

ரயில் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளின் நிலைகளை பரிந்துரைத்திருக்கும் டாக்டர்விவேக் தேவ்ராய் கமிட்டி பரிந்துரை கள் கைவிடப்படவேண்டும். மருத்துவத் துறையில் கோடிக்கணக்கான இந்திய மக்களின் உயிரை பாதுகாத்துவரும் கர்நாடகா ஆன்டிபயோடிக் லிமிடெட் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தனியார் மயமாக்கக்கூடாது. அதிகார மட்டத்தில் தேங்கியிருக்கும் ஊதிய திருத்தம் தொடர்பான கோரிக்கைகளில் மத்திய அரசு உடனே விரைவுபடுத்தி நிறைவேற்றவேண்டும். உலகநாடுகளின் அனுபவங்களின் அடிப்படை யில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு உறுதியேற்பு ஓய்வூதியத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். வயது முதிர்வு ஓய்வில் பணக்கொடை மருத்துவப்பயன் மற்றும் விடுப்புத்தொகை கோரிக்கைகளில் ஒத்த நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

3வது ஊதிய திருத்தக்குழுவின் பரிந்துரைகளை சிதைக்கக்கூடாது. இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், பொதுச்சேவை துறைகளை பாதுகாத்து ஆதரிப்பதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பின் லட்சியத்தையும் இந்திய மக்களின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் என இக்கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இக்கூட்டமைப்பின் புதிய பரிணாம வடிவம் மற்றும் செயல்திட்டங்கள் பொது த்துறை வங்கிகள், பொதுத்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மட்டத்தில் மகிழ்ச்சியையும் புது நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.

Image result for theekkathir